திருப்பரங்குன்றம் அருகே கைக்குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை..!!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதுகுளம் 2–வது பிட் சன்னாசி கோனார் காம்பவுண்டை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயசித்ரா என்ற கவிதா (வயது28). இவர்களது மகன்கள் அரி(5), சரதேசன் (1½). நேற்றிரவு வழக்கம்போல் கவிதா தன் குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் அந்த வீட்டில் இருந்து புகை வந்தது. ஒரு சிறுவனின் அலறல் சத்தமும் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது கவிதா, சரதேசன் ஆகிய இருவரும் தீயில் கருகி இறந்து கிடந்ததும் அரி படுகாயத்துடன் உயிருக்கு போராடியதும் தெரிய வந்தது.
வீட்டில் உள்ள அறை தீபற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதுபற்றி திடீர்நகர் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். படுகாயத்துடன் இருந்த அரியை காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தில் போது கவிதாவின் கணவர் வீட்டில் இல்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கவிதாவின் கணவர் சரவணனும், அவரது தந்தை பிச்சையும் நேற்று இரவு 10 மணி வரை வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் சரவணன் திருப்பூரில் நடைபெறும் உறவினர் வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு சென்று விட்டார். அவரது தந்தை பிச்சை தனது சொந்த ஊரான ஆண்டார்கொட்டாரத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் கவிதா வீட்டின் ஜன்னல், கதவுகளை எல்லாம் பூட்டிவிட்டு மண் எண்ணெயை தன் மீதும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். * * * கணவன் சரவணனுடன் கவிதா. * * * குழந்தை சரதேசன்
Average Rating