கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: 5 பேர் கைது…!!
பெங்களூரை சேர்ந்தவர் அன்னபூரணி. இவர் ‘கடன் வாங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்ற விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வேண்டும் என்றார். எதிர்முனையில் சென்னையில் இருந்து பேசிய மர்ம நபர் பரங்கிமலையில் உள்ள லாட்ஜில் தங்குமாறும் அங்கு வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அன்னபூரணி பரங்கிமலையில் உள்ள ஓட்டலில் தங்கினார். அங்கு வந்த 5 பேர் கும்பல் ரூ.50 லட்சத்திற்கு ரூ.10 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றனர்.
கடந்த 23–ந் தேதி மீண்டும் அதே ஓட்டலுக்கு வந்த அன்னபூரணி, மர்ம நபர்களிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். இதைதொடர்ந்து ரூ.50 லட்சம் இருப்பதாக ஒரு பையை அன்னபூரணியிடம் மர்ம கும்பல் கொடுத்தனர்.
இதனை வீட்டில் சென்று பிரித்து பார்க்குமாறு எச்சரித்து அனுப்பினர். இதனால் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அன்னபூரணி பெங்களுர் திரும்பினார்.
வீட்டிற்கு வந்த அவர் பையை பிரித்து பார்த்த போது அதில், பொம்மை மற்றும் பேப்பர் பண்டல்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்னபூரணி இது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்தார். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பண மோசடி கும்பலை பிடிக்க கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் போலீசாருக்கு உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரண், அஜய்குமார், சிபின், பிரின்ஸ், கோவையை சேர்ந்த ரிபின் ஆபிரகாம் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், 17 பவுன் நகை, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி கும்பலுக்கு சுந்தர் தலைவராக இருந்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவர்கள் இதுபோல் வேறு யாரிடமும் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டார்களா? அவர்கள் கூட்டாளிகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Average Rating