சர்க்கரை ஆலை வளாகத்தில் தொழிலாளர்களை பயமுறுத்திய 14 பாம்புகளை பிடித்த இளம்பெண்…!!
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன். சித்த வைத்தியர். இவரது மகள் மணிமேகலை (வயது 30). இவர், 10–ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
கடந்த 10 வருடமாக தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் தனது உதவியாளர்களுடன் பாம்புகளை பிடித்து வருகிறார். இவரை சினேக் மனோ என்று எல்லோரும் அழைத்து வருகிறார்கள். பாம்பு பிடிப்பதில் இவர் பிரபலமாக விளங்குகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் பல்வேறு வகையான பாம்புகள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.
இதையடுத்து தொழிலாளர்கள் ஆலை அதிகாரிகளிடம் கூறினார்கள். அந்த பகுதியில் பாம்பு பிடிப்பதற்குரிய ஆட்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்க மங்கலத்தை சேர்ந்த மணிமேகலை பாம்பு பிடிப்பதில் சிறந்தவர் என்ற தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு மணிமேகலையை திருவெண்ணைநல்லூருக்கு அழைத்து வந்தனர். அவர், ஆலையில் உள்ள நல்லபாம்பு உள்பட 14 பாம்புகளை மிகவும் எளிதாக மடக்கி பிடித்தார்.
இதுகுறித்து மணிமேகலையிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். எனது தந்தை காட்டுக்கு மூலிகை பறிக்க செல்லும் போது என்னை அழைத்து செல்வார். அப்போது அங்கு பல்வேறு வகையான பாம்புகள் இருக்கும். அந்த பாம்புகளை பிடிக்கும் முறை பற்றி அவர் எனக்கு சொல்லி கொடுத்தார். நானும் அதை கற்றுக் கொண்டேன். இதனால் பாம்பு என்றால் எனக்கு பயம் போய் விட்டது.
பாம்புக்கு காதுகள் கிடையாது. அதிர்வுகளை வைத்துதான் அது அறிந்து கொள்ளும். காதுகளே இல்லாத பாம்பு மகுடிக்கு மயங்கும் என்று சிலர் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.
குளிர்ச்சியான இடங்களில் மட்டுமே பாம்புகள் இருக்கும். பாம்பு வயல்வெளியில் உள்ள எலிகளை அழித்து விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. பாம்பு விவசாயிகளின் நண்பன். பாம்புக்கு நினைவு திறன் கிடையாது மேலும் பழி வாங்கும் தன்மையும் கிடையாது. தன்னை அடித்துவிட்டாலோ அல்லது தொந்தரவு கொடுத்தாலோ தன்னை காப்பாற்றி கொள்ள மனிதர்களை கடித்துவிடுகிறது.
பாம்பை கண்டால் அடிக்காதீர்கள். நாங்கள் எந்த ஆயுதங்களும் இல்லாமல் பாம்பை பிடிப்போம். ஆயுதங்களை பயன்படுத்தினால் பாம்புக்கு காயங்களோ அல்லது எலும்பு முறிவோ ஏற்படும்.
நாங்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து இருக்கிறோம். இதுவரை பாம்பு எங்களை கடித்தது இல்லை. பாம்பின் வாலை பிடித்தால் அது தப்பி ஓட முயற்சி செய்யும். நம்மை கடிக்காது. எனவே, பாம்பை பிடிக்கும் போது வாலை பிடித்தால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating