கணவன் சரியாக வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை..!!
கோவை துடியலூர் அருகே உள்ள பெரிநாயக்கன்பாளையம் பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 29). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் பிரகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் மஞ்சுளா குடும்பம் நடத்த பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். சம்பவத்தன்று கணவன்– மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா வீட்டில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பிரகாஷ் படுக்கை அறைக்கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது மஞ்சுளா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற பிரகாஷ் மஞ்சுளாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு மஞ்சுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 6 வருடத்தில் மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating