பூந்தமல்லி பஸ் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்…!!
பூந்தமல்லி, பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் சரண்யா தேவி. இவரது சொந்த ஊர் மாயவரம். இவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்த சிதம்பரத்தை சேர்ந்த மனோஜும் காதலித்ததாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யாதேவிக்கும் மனோஜுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பேசாமல் இருந்தனர். இதனால் மனோஜ் வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு பேச வரும் படி சரண்யாதேவியை செல்போன் மூலம் மனோஜ் அழைத்தார். இதனை ஏற்று சரண்யாதேவி அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். கோபத்தில் இருந்த சரண்யா தேவி அந்த வாலிபருடன் அங்கிருந்து செல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரண்யாதேவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் மனோஜை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர்.
படுகாயம் அடைந்த சரண்யாதேவிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது கழுத்தில் 20 தையல் போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating