நீலகிரியில் வடமாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற புலி…!!
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள்– விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வன விலங்குகளின் அட்டூழியத்தை தடுக்க இதுவரை வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைக்க வில்லை.
தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்களை காட்டுயானைகள் ஓடஓட விரட்டி மிதித்து கொல்வதும், புதர்மறையில் பதுங்கியிருக்கும் புலிகள் பாய்ந்து தாக்கிக்கொல்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களை அச்சுறுத்திய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுகின்றனர். இருப்பினும் அவைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கின்றன.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வடமாநில தொழிலாளியை புலி அடித்துக்கொன்ற கொடூரம் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த தோட்டத்து சாலையில் மகு வயது (45) என்பவர் தனது மனைவி சோமாரியுடன் தங்கியிருந்தார். நேற்று இரவு வீட்டின் வெளியே மகு நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பாய்ந்த வந்த புலி அவரை தாக்கியது.
பின்னர் கழுத்தை கடித்து தரதரவென இழுத்துச்சென்றது. புதர்மறைவுக்குள் கொண்டு சென்ற புலி மகுவின் கழுத்தை கடித்து துண்டித்தது.
பின்னர் உடலை இழுத்துக் கொண்டு 2 கி.மீட்டர் தூரத்துக்கு ஓடியது. அங்கு தனது கோரப்பசிக்கு மகுவின் உடலை இரையாக்கிக்கொண்டது. கணவரை வெகுநேரமாக காணாததால் அவரது மனைவி சோமாரி அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் தனது கணவரை காணவில்லை என்று கூறினார்.
அவர்கள் இன்று காலை மகுவை தேடிச்சென்றனர். அப்போது அதே பகுதியில் புதர்மறைவில் மகுவின் தலைமட்டும் கிடந்தது. உடலை காணவில்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
புலியின் கால் தடத்தை வைத்து அதன் வழியே சென்றனர். 2 கி.மீட்டர் தூரத்தில் மகுவின் உடல் எலும்புக்கூடாக கிடப்பது தெரியவந்தது.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து வனத்துறையினர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொழிலாளியை கோரமாக புலி தாக்கி கொன்றுள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
ஆட்கொல்லி புலி கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு தொழிலாளியை அடித்துக்கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடம் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating