15 அடி ஆழ சவக்குழிக்குள் 14 நாள் சமாதி நிலையில் இருந்தவர் உயிருடன் எழுந்து வந்தார்..!!
பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பட்காமா கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் பாபா என்பவர் சமாதி நிலையை அடைய விரும்புவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
10 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 15 அடி ஆழத்தில் இதற்காக பூமியில் குழி தோண்டப்பட்டது. அந்தக் குழிக்குள் இறங்கிய பிரமோத் பாபா, உள்ளே ஒரு கட்டிலின்மீது அமர்ந்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்துப் போனார். கட்டிலின் மேற்பகுதியை ஒரு துணியால் போர்த்திய அவரது பக்தர்கள், மண்ணைத்தள்ளி குழியை மூடி சமன்படுத்தினர்.
சம்பவத்தன்றே, இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், போலீசாரும் அவரை குழியில் இருந்து வெளியே எடுக்க முயன்றதாகவும், ஆனால், பாபாவின் பக்தர்கள் அவர்களை தடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சவக்குழியை கடந்த 14 நாட்களாக போலீசாரும், டாக்டர்களும் காவல்காத்துவந்த நிலையில் நேற்று பிரமோத் பாபா சமாதிநிலை நீங்கி, குழியில் இருந்து உயிருடன்வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாபா நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், அவர் குழிக்குள் இறங்கியதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் யாரும் நேரில் பார்க்கவில்லை என தெரியவந்துள்ளது.
Average Rating