அழைத்து வரப்படவில்லை; இழுத்து வரப்பட்டேன்- நீதிமன்றத்தில் சதாம் ஆவேசம
நீதிமன்ற விசாரணைக்கு எனது விருப்பத்தை மீறி வலுக்கட்டாயமாக இழுத்து வந்துள்ளனர் என சதாம் உசேன் தெரிவித்தார். 1982 ம் ஆண்டு நடந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் மற்றும் சிலர் மீது அமெரிக்கா நியமித்த நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. சதாம் சார்பில் ஆஜரான மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இதைக்கண்டித்தும், விசாரணை முறையாக நடக்கவில்லை எனக் கூறியும் சதாம் உசேன் 18 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் புதன்கிழமை அந்த வழக்கின் விசாரணை துவங்கியது. சதாம் வழக்கறிஞர்கள் விசாரணையை புறக்கணித்தனர். அவர்களுக்குப் பதிலாக சில வழக்கறிஞர்களை சதாமுக்காக நீதிபதி நியமித்தார்.
நீதிமன்றத்திற்கு வந்த சதாம் கூறியது:
இங்கே நான் அழைத்து வரப்படவில்லை. வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்டுள்ளேன். எனக்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களை மக்கள் எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கு சுயமரியாதை அதிகமாக இருப்பதால் பிடிவாதம் பிடிக்காமல் இங்கே வந்துள்ளேன் என்றார்.