யாழில் ரவுடித்தனத்திற்கு இடமில்லை! 24மணி நேர கண்காணிப்பு குழு தயார்..!!
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள், ரவுடித்தனத்தை முற்றாக ஒழிப்பதற்கான விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு 24மணி நேரமும் சீருடையிலும், சிவில் உடையிலும் கடமையில் இருக்கும் என்று டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் விசேட இரவு, பகல் ரோந்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. இருந்த போதும் பொலிஸாருடைய நடவடிக்கைகளால் அதிகளவிலான குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் நடைபெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வழமையான ரோந்து சேவைகளிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ள ரவுடித்தனம், வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறானவர்களை உடனடியாக கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவ் விசேட பொலிஸ் குழு 24 மணிநேரமும் கடமையில் இருக்கும். இவர்கள் சீருடையிலும், சிவில் உடையிலும் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள்.
மேலும் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் ரவுடிகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என்றும் பொலிஸ் அதிகாரி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating