நைஜீரியா மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு…!!
நைஜீரியாவில் இன்று மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
வடகிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் இன்று காலை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே புகுந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில், பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த பலர் உயிருக்குப் போராடிய நிலையில், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். அப்போது மற்றொரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவில் பாதுகாப்பு படைக்கு கடும் சவாலாக விளங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், மைதுகுரி நகரை அடிக்கடி குறிவைத்து தாக்குவது குறிப்பிடத்தக்கது.
Average Rating