செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை…!!
செங்கல்பட்டு சின்னமணியக்காரா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி விமலா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சர்வேஷ் (3) என்ற மகனும், லட்சுமி (1½) என்ற மகளும் உள்ளனர். சங்கரநாராயணன் செங்கல்பட்டு பகுதியில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சங்கரநாராயணன் வழக்கம் போல தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கடைக்கு சென்றார்.
மாலை 3½ மணியளவில் விமலா தனது 2 குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தன்னுடைய உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். அதற்குள் தாய், மகன் இருவரும் தீயில் கருகி இறந்தனர். குழந்தை லட்சுமி கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். பின்னர் அங்கிருந்து சென்னை குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜ்ஜார்ஜ், செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லேமேக் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் ஆன நாள் முதல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. நேற்று தனது மகள் லட்சுமியை அலங்கரித்து போட்டோ எடுக்கவேண்டும் என்று விமலா கணவனிடம் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அதனால் மனவருத்தம் அடைந்த விமலா குழந்தையை கொன்று தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
Average Rating