சொத்திற்காக விதவையான பெண் : பணத்தின் மேல் மோகம்..!!
கணவர் இறந்துவிட்டதாக கூறி அவரது சொத்தை மனைவி ஒருவர் அபகரித்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு.
இவரது மனைவி வீரம்மா இவர்களுக்கு சுப்பையா, ரமணா என 2 மகன்கள் உள்ளனர். சுப்பா நாயுடு சரியாக தொழிலுக்கு செல்லாததால் அவரை அவரது மனைவியும் பிள்ளைகளும் வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.
இதனால் சுப்பாநாயுடு அங்குள்ள திரையரங்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது சகோதரர் வீட்டில் தங்கினார். இந்நிலையில் சுப்பா நாயுடு பெயரில் உள்ள வீட்டை அபகரிக்க வீரம்மா முடிவு செய்தார். இதுகுறித்து தனது மகன்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதற்காக சுப்பா நாயுடு இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
மேலும் தனது கணவர் உடலை மயானத்தில் எரித்ததாக கூறி மயான காவலாளியிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதன் மீது விசாரணை நடத்த வீரம்மா வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, அவர் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதையும், காலில் மெட்டி அணிந்திருப்பதையும் கண்டு சந்தேகம் அடைந்தனர்.
உடனே சுப்பாநாயுடுவின் உறவினர்களிடம் விசாரித்த போது அவர் உயிருடன் இருப்பதும் சொத்துக்காக அவர் இறந்ததாக வீரம்மா நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மனைவி வீரம்மா, மகன்கள் சுப்பையா, ரமணா ஆகியோர் மீது பொலிஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Average Rating