பெற்றோர் எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை மணந்த இளம்பெண்..!!
திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரிமலை தாயலூரை சேர்ந்தவர் சென்றாயன். இவரது மகன் விஜயராஜ் (வயது 30), மாற்றுத்திறனாளி. அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். ஏலகிரிமலை நிலாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகள் வானதி (21).
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜயராஜின் கடையில் வானதி வேலைக்கு சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக விஜயராஜும், வானதியும் நெருங்கி பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயராஜிடம், முறைப்படி தங்கள் வீட்டிற்கு குடும்பத்தோடு வந்து பெண் கேட்கும்படி வானதி கூறினார். அதன்படி விஜயராஜ் தனது குடும்பத்தினருடன் வானதியின் வீட்டிற்கு வந்து வானதியை பெண் கேட்டார். அவர்கள் பெண் தர மறுத்து விட்டனர்.
மேலும் தங்களது மகள் வானதியை விஜயராஜியின் கடைக்கு வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர்.
அதனால் பெற்றோர் தங்களை சேர விட மாட்டார்களோ? என காதல் ஜோடிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொள்வது என விஜயராஜ்– வானதி ஆகிய 2 பேரும் முடிவு எடுத்தனர்.
அதன்படி நேற்று திருப்பத்தூர் அருகே உள்ள பசலிகுட்டை முருகன் கோவிலில் காதல் ஜோடி விஜயராஜ்– வானதி ஆகிய 2 பேரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பேரும் தஞ்சம் புகுந்தனர்.
பின்னர் விஜயராஜ், வானதி ஆகிய 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் வரவழைத்து, அவர்களை சமாதானம் செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இரு தரப்பினரும் சமாதானம் ஆன பிறகு காதல் ஜோடியை அவர்களுடன் வழியனுப்பி வைத்தனர்.
Average Rating