சிறுமிக்கு சூடு வைத்துக் கொடுமை; தகுந்த தண்டனை வழங்கக் கோரி நாளை அமைதிப் பேரணி..!!
மட்டக்களப்பு -காத்தான்குடிப் பிரதேசத்தில் 10வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு நீதிமன்றத்தினால் தகுந்த தண்டனைகள் வழங்கக் கோரியும், அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரியும் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதிப் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளது.
காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தேசிய தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றான் மஸ்ஊதி இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் அதனை தேசிய தௌஹீத் ஜமாஅத் வாபஸ் பெற்றுக்கொண்டு சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு நாளைய தினம் பிணை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருப்பதால் நாளைய தினம் திட்கட்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதிப் பேரணியொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 10வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையிலான பொலிஸார் அதிகூடிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் பல்வேரு சவால்களுக்கு மத்தியில் உறுதியாக இருந்ததை எமது தேசிய தௌஹீத் ஜமாஅத் பாராட்டுகின்றது.
மேற்படி விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகியோர் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ள இவர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கக் கோரியும் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரியும் அதே தினத்தில் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதிப் பேரணியொன்றை நடாத்தவுள்ளோம்.
ஏனெனில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் குடும்பத்தார் எம்மை நாடி வரும் பட்சத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராட தயாராகவுள்ளோம்.
இச் சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் அத்வைதத்திற்குள் ஒழிந்திருக்கும் அநாச்சாரங்கள்,மாற்றுமதக் கோயில்களில் வணங்கப்படுவதும் அல்லாஹ்தானா? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வீடியோ காட்சிகளுடன் தெளிவுபடுத்தப்பட்டது.
Average Rating