சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டலால் வாலிபர் தற்கொலை முயற்சி…!!
வேளச்சேரி நேருநகர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்த ரஞ்சித் (22). காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் ரஞ்சித், நண்பர் ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்ற போது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி விட்டார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக, அங்கு பணி புரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ரஞ்சித்திடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை கொடுத்த பின்னரும் குறிப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இதனால் ரஞ்சித் கடும் மன உளைச்சலில் இருந்தார். இதன் காரணமாகவே அவர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது பற்றி ரஞ்சித்தின் தந்தை வீரமணி, கிண்டி போலீசில் புகார் செய்தார். அதில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியது உண்மைதானா? என்பது பற்றி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னர் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Average Rating