திருவெண்ணைநல்லூர் அருகே நின்ற லாரி மீது வேன் மோதல்: அண்ணன்ப-பதம்பி உள்பட 5 பேர் பலி…!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் அருகே செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். (வயது 52). இவர், மடப்பட்டில் நகை அடகு கடை மற்றும் உரக்கடை நடத்தி வந்தார். இவரது தம்பி முத்துகுமரன் (42). இவரும் கெடிலத்தில் தனியாக நகை அடகு கடை மற்றும் உரக்கடை நடத்தி வந்தார். இருவருக்கும் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தனர்.
இன்று காலை சுப்பிரமணியனும், முத்துகுமரனும், தங்கள் நிலத்தில் வெட்டிய கரும்புகளை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்க வாகனங்களை கொண்டு வர அரசூர் கூட்டு ரோட்டில் செயல்படும் சர்க்கரை ஆலை கோட்ட அலுவலகத்துக்கு சென்றனர். அலுவலகம் எதிரே சாலையோரம் நின்று கொண்டு வாகனங்களை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
அதே போல் பழைய பட்டணம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன என்ஜினீயர் சண்முகம் (32) என்பவரும் தனது நிலத்தில் வெட்டிய கரும்புகளை ஆலைக்கு கொண்டு செல்ல வாகனத்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது சர்க்கரை ஆலைக்கு கரும்பு இறக்கி விட்டு வந்த லாரியை தடுத்து நிறுத்தி அதன் டிரைவரான பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த சகாதேவன் (40) என்பவரிடம் கரும்பு ஏற்றி செல்ல 3 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக பன்றிகளை ஏற்றி சென்ற ஒரு மினி வேன் எதிர்பாராதவிதமாக நின்ற லாரி மீது அதி வேகமாக மோதியது.
மேலும் பேசிக்கொண்டிருந்த சுப்பிரமணியன், முத்துகுமரன், என்ஜினீயர் சண்முகம் ஆகிய 3 பேர் மீதும் அந்த மினி வேன் மோதியது. இதில் அவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். மேலும் மினி வேனில் பயணம் செய்த பன்றி வியாபாரிகளான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுரேஷ் (36), சக்தி (33) ஆகியோரும் படுகாயம் அடைந்து இறந்து போனார்கள்.
மினி வேன் டிரைவர் ஜெயன் (37), கிளீனர் மாரியப்பன் (28) ஆகியோர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து போனவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்த மினி வேன் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோரை சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் நகை அடகு கடை மற்றும் உரக்கடைகள் அதிபர்களான அண்ணன்- தம்பி இருவரும் இறந்ததால் செம்மனந்தல் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Average Rating