நல்ல கதையும், நேரமும் ஒத்துவந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆசை நடிகை ஐஸ்வர்யாராய் சென்னையில் பேட்டி

Read Time:4 Minute, 47 Second

nits0002.jpgநேரமும், கால்சீட்டும் ஒத்துவந்தால் தமிழ்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஐஸ்வர்யாராய் தெரிவித்தார். நடிகை ஐஸ்வர்யாராய் நக்ஷத்ரா டயமண்ட் ஜிவல்லரியின் சார்பில் காதணிகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் உள்ளிட்ட 30 வகை புதிய டிசைன் நகைகளை அறிமுகப்படுத்தும் விழா சென்னை பார்க் ஓட்டலில் நடந்தது. இந்த நகைகளை முன்னாள் உலகஅழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார். சந்தனக்கலர் சேலையில் மேடையில் புன்னகை தவழ வந்து நின்ற ஐஸ்வர்யாராயை பத்திரிகை புகைப்படக்கலைஞர்களும், வீடியோ கேமராமேன்களும் வளைத்து வளைத்து படம் எடுத்துக் கொண்டே இருந்தனர். ஐஸ்வர்யாராயும் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி சளைக்காமல் பல்வேறு போஸ்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். தொடர்ந்து நக்ஷத்ரா டயமண்ட் ஜிவல்லரி நடத்திய போட்டியில் வெற்றிபெற்ற 5 பேர் ஐஸ்வர்யாராயை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஐஸ்வர்யாராய் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

பெருமைப்படுகிறேன்

கேள்வி:- பெண்களுக்கும், வைரத்திற்கும் இடையே ஈடுபாடு இருப்பதன் காரணம் என்ன?

பதில்:- ஆண்களுக்கும், கார்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் போன்றது அது.

கேள்வி:- சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் எது?

பதில்:- சென்னையில் குரு படத்தில் நடித்தபோது தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தேன். அப்போது படக்குழுவினருடன் இருந்தேன். அந்த சமயம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கேள்வி:- தமிழ்நாட்டைப்பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இந்தியனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னை பற்றி அழைக்கும்போது “ஐஸ்” என்றுதான் கூறுகிறார்கள். அதற்கு ஷங்கர் இயக்கிய “ஜீன்ஸ்” படம் தான் காரணம். “ஐஸ்” என்ற பெயரை தந்தது தமிழகம்தான்.

முதலில் நான் மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தில்தான் நடித்தேன். அதற்கு முன்பு நான் மாடலிங்கில் தான் இருந்தேன். இருவர் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் நடிப்பு, டயலாக் பேசுவது, மொழி, கலாசாரம் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன். மேலும் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற தமிழ் படத்திலும் நடித்து உள்ளேன்.

தமிழில் நடிக்க ஆசை

கேள்வி:- தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பீர்களா?

பதில்:- தமிழ் படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறது. நல்ல கதையும், அதற்கான நேரமும், கால்ஷீட்டும் ஒத்துவந்தால் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.

கேள்வி:- அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா?

பதில்:- நான் தற்போதுதான் திருமணமாகி நல்ல நிலையில் இருக்கிறேன். வாழ்க்கையை ஒவ்வொரு நாளாக வாழ்ந்து வருகிறேன். மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். நாளைக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லமுடியாது.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

தாமதமாக வந்தார்

நிகழ்ச்சிக்கு நடிகை ஐஸ்வர்யாராய் பகல் 12 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரோ பகல் 1.23 மணிக்குத்தான் மேடைக்கு வந்தார். அப்போது ஒரு நிருபர் 11/2 மணிநேரம் காலதாமதமாக வந்து இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, “நான் வந்த விமானம் தாமதம்தான் காரணம்” என்று ஐஸ்வர்யாராய் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டெஸ்ட் போட்டித்தொடரை வென்றுள்ளது இலங்கை அணி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…