புரூசெல்ஸ் தாக்குதலில் இந்திய பெண் படுகாயம் – பின்னணி பாடகர் மனைவி, மகன் தப்பினர்…!!
புரூசெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், “நாங்கள் புரூசெல்ஸ் தூதருடன் பேசினோம். இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை” என கூறினார்.
அதே நேரத்தில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்யும் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார்.
விமான நிலைய தாக்குதலில் பிரபல இந்திப்பட பின்னணி பாடகர் அபிஜித் பட்டாச்சார்ஜியின் மனைவியும், மகனும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இதுபற்றி அபிஜித் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “புரூசெல்ஸ் விமான நிலைய தாக்குதலின்போது அங்கிருந்த என் மனைவி, மகனுடன் செல்போனில் பேசினேன். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் உள்ளேன்” என கூறி உள்ளார்.
Average Rating