பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மகனை கொன்ற தந்தை தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மாயாண்டி(வயது 68). இவரது மகன் பாஸ்கர். சொத்துதகராறில் பாஸ்கர், தனது தந்தை மாயாண்டியை தகாத இடத்தில் மிதித்து கீழே தள்ளி விட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி, பாஸ்கரை வேல்கம்பால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை செசன்சு கோர்ட்டு, மாயாண்டிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாயாண்டி மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். விடுதலை அப்பீல் வழக்கை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் விசாரித்தது. விசாரணையின் போது, மாயாண்டியின் பேரன் ரஞ்சித்(வயது 10), ரேவதி(8) ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி, ஜாமீனில் உள்ள தாத்தா மாயாண்டி மற்றும் பாட்டி அரவணைப்பில் தாங்கள் இருந்து வருவதால், தாத்தா மாயாண்டியை விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம், கேட்டுக்கொண்டனர். இதை கருணையுடன் பரிசீலித்த நீதிபதிகள், மாயாண்டியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். தீர்ப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த கொலை நடக்கவில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட கோபத்தால் ஒரு நிமிடத்தில் சம்பவம் நடந்து விட்டது என்று மனுதாரர் மாயாண்டி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் அந்த சம்பவத்தை நினைத்து வருந்தி இருப்பதே அவருக்கு பெரிய தண்டனை. மாயாண்டிக்கு அளிக்கப்பட்டுள்ள ஜெயில் தண்டனையால் அவரது பேரன், பேத்தி பரிதாப நிலையில் உள்ளனர்.
எனவே கருணை அடிப்படையில் நியாயம் வழங்க வேண்டியது அவசியமாகிறது. எனவே மாயாண்டி மீதான கொலை குற்றச்சாட்டை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கிய குற்றமாக மாற்றி அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.