இரயில் நிலையத்தினுள் சிக்கித் தவித்த பயணிகள்: காரணம் என்ன…!!
பிரித்தானியாவில் ரயில் நிலையம் ஒன்றில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் சிக்கித் தவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் மாநகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சட்டன் ரியில் நிலையத்தில் தான் டசின் கணக்கில் பயணிகள் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சட்டன் ரயில் நிலைய ஊழியர்கள் இரவில் வேறு ரயில்கள் வர வாய்ப்பு இல்லை என நினைத்து ரயில் நிலையத்தின் வெளியேறும் வாதிலை மூடிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் விக்டோரியா ரயில் நிலையத்தில் இருந்து வந்த பயணிகள் ரயில் அதிகாலை 1.30 மணியளவில் சட்டன் ரயின் நிலையத்தில் வந்து சேர்ந்துள்ளது.
இதனிடையே ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதி மூடப்பட்டிருந்ததால் பயணிகள் அனைவரும் நிலையத்தின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
வீடு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட பயணிகள் அப்பகுதியில் ரயில் நிலைய ஊழியர்களை தேடியுள்ளனர். ஆனால் எவரும் இல்லை என அறிந்ததும் செய்வதறியாது தவித்துள்ளனர்.
இதனையடுத்து வெளியேறும் வாசலை மூடியிருந்த ஷட்டரை உடைக்க முடிவு செய்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த ஷட்டரை மெதுவாக உடைத்து ஒவ்வொரு பயணிகளாக அதிகாலையில் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனிடையே தெற்கு ரயில்வே நிர்வாகம் சட்டன் நிலையத்தில் ஊழியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
அந்த ரயில் நிலையத்தில் வரும் கடைசி ரயில் வரும் வரை ஊழியர் காத்திருந்து பயணிகள் எவரும் நிலையத்தினுள் சிக்காதவாறு பார்த்து வெளியேற்றிய பின்னரே ஊழியர்கள் வெளியேறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டன் ரயில் நிலைத்தில் அந்த நேரத்தில் எந்த ரயிலும் நிற்பதில்லை எனவும் அதனால் ஊழியர்கள் உரிய நேரத்தில் வாசலை மூடியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating