பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவு
பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவாக இருப்பதாக ருமேனிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள், தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகளின் புத்திக் கூர்மை (ஐ.க்யூ) உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது. இதில் குழந்தைகளிடம் நாம் காட்டும் அன்பும், பாசமும், பாதுகாப்பும் அவர்களின் புத்திக் கூர்மையை நிர்ணயம் செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆய்வின்படி பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் மிகுந்த பாசத்தோடும், பாதுகாப்போடும், அக்கறையோடும் வளருகின்றன. இதனால் அவர்களின் ஐ. க்யூ அளவு 109 புள்ளிகளாக உள்ளது. தத்துப் பெற்றோரிடம் வளரும் குழநதைகளின் ஐ க்யூ அளவு 81 ஆக உள்ளது. அதேசமயம், ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகளின் புத்திக் கூர்மை, 73 ஆக உள்ளது. எனவே குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவர்கள் மிகவும் இளம் வயதிலேயே தத்தெடுத்து விட வேண்டும் என்று விஸ்கான்சின் பல்கலைக்கழக சைக்காலஜிஸ்ட் சேத் போலக் கூறியுள்ளார்.