பெற்றோர் பைக் வாங்கி தராததால் பிளஸ்–2 மாணவன் தற்கொலை…!!
ஆம்பூர் டவுன் கங்காபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். ஷு கம்பெனி தொழிலாளி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது17). பிளஸ்–2 மாணவர். ராஜேந்திரன் தற்சமயம் பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து அவர், கல்லூரிக்கு செல்ல இருந்ததால் பெற்றோரிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.
18 வயது ஆகாததால் ஓட்டுனர் உரிமம் கிடைக்காது. இதனால் பைக் வாங்கி தரமுடியாது என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ராஜேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், பைக் தொடர்பாக நேற்றிரவும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட ராஜேந்திரன், நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினார். கன்னிகாபுரம் பகுதிக்கு சென்ற மாணவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அப்போது பைபாஸ் சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி அங்கு ஓரமாக நின்றது. டிரைவர் சாலையோரம் இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றார்.
இதை கவனித்த மாணவன் ராஜேந்திரன், யாருக்கும் தெரியாமல் கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார். சாப்பிட்டு முடித்த பின் டிரைவர் லாரியை இயக்கி புறப்பட்டார். அப்போது, சக்கரம் ஏறி இறங்கியதில் மாணவன் தலை நசுங்கி பலியானார்.
மாணவன் லாரி சக்கரம் முன்பு தலை வைத்து படுத்தது தெரியாமல் வண்டியை எடுத்து விட்டோமோ என்று டிரைவர் அதிர்ச்சிக்குள்ளானார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்றோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ஆம்பூர் டவுன் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating