புனே கல்லூரி வளாகத்தில் மோதல்: 200 பேர் மீது வழக்கு…!!
புனே கல்லூரி வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புனே பெர்குசன் கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிலர் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பியதால் மோதல் மூண்டது. இந்த பிரச்சினை குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்த கல்லூரியின் முதல்வர், பிறகு தவறுதலாக புகார் மனுவை அனுப்பிவிட்டதாக கூறினார்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத், நேற்று இரவு மாணவர்களை சந்தித்து பேசினார். அவர் தனது உரையை முடித்துவிட்டு புறப்பட்டபோது அவருக்கு எதிராக பா.ஜ.க இளைஞரணி மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவரது கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால், தேசியவாத காங்கிரசாருக்கும், அவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து கலவரத் தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், எம்.எல்.ஏ.வை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லேசான தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அடையாளம் தெரியாத 200-க்கும் மேற்பட்டோர் மீது டெக்கான் ஜிம்கானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், சிசிடிவி கேமரா பதிவு மற்றும் சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
Average Rating