ஹோலி பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் போலி மது குடித்த 35 இந்துக்கள் பலி…!!
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் போலி மதுபானம் அருந்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
பழைய ஐதராபாத் நகரம் அமைந்துள்ள டண்டோ முகமது கான் மாவட்டத்தில், ஹோலி பண்டிகையையொட்டி கடந்த திங்கட்கிழமை இரவு போலி மதுபானம் அருந்திய சுமார் 120 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பெண்கள் உட்பட 24 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
இந்நிலையில், போலி மதுபான பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்களில் 10 பெண்கள் உள்பட 35 பேர் இந்துக்கள் என தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை ஐம்பதை கடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
போலீஸ் நடவடிக்கை மற்றும் வழக்கு அலைச்சலுக்கு பயந்து பலர் தங்கள் உறவினர்களின் இறப்பை பற்றி யாருக்கும் தெரிவிக்காமல், பிணங்களை ரகசியமாக புதைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating