லாகூர் தாக்குதலை அடுத்து பஞ்சாப்பில் மிகப் பெரிய அளவில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது பாகிஸ்தான்…!!
லாகூரில் உள்ள பூங்காவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடிவிட்டு பொழுதுபோக்க வந்திருந்த மக்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பதால் அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் தீவிரவாத குழுக்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது பாகிஸ்தான் அரசு.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த நவாஸ் ஷெரிப் ’எனது மகன், மகள், சகோதர-சகோதரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இந்த சம்பவத்தை கருதுகிறேன். இதில் தொடர்புடைய தீவிரவாதிகள் அனைவரையும் தேடி கண்டுபிடிப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தானில் மக்கள்தொகை அதிகம் கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் மிகப் பெரிய அளவில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது அந்நாட்டு அரசு. உளவுத்துறை, ராணுவ வீரர்கள் மற்றும் ரேஞ்சர்ஸ் அடங்கிய படை பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் லாகூர், பைசலாபாத் மற்றும் முல்தான் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சந்தேகத்துக்குரிய பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியிலும் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating