வேலைக்கு செல்லுமாறு கூறியதால் கத்திரிக்கோலால் தாயை குத்தி கொன்ற மகள்…!!
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், குருசாமி நகர் 4–வது தெருவில் வசித்து வந்தவர் வனஜா (வயது 58) டெய்லர். வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வந்தார்.
இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மகள்கள் சுஜா, காயத்திரி, சுஜா திருமணமாகி வெளியூரில் உள்ளார். காயத்திரி என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் காயத்திரி பணிக்கு செல்லாமல் இருந்தார். இதனை தாய் வனஜா கண்டித்து ஏதாவது வேலைக்கு செல்லுமாறு கூறினார்.
இதனால் தாய்–மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் காயத்திரி மனஅழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த காயத்திரி அருகில் இருந்த கத்திரிக்கோலால் தாய் வனஜாவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த காயத்திரி இதுபற்றி ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வனஜாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே வனஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சங்கர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து காயத்திரியை கைது செய்தனர்.
Average Rating