உதிரியாக கிடக்கும் அணு ஆயுதங்களை பாதுகாக்க அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு…!!
வாஷிங்டனில் நடைபெறவுள்ள அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் உலக நாடுகளிடம் உதிரியாக இருக்கும் அணு ஆயுதங்களை பாதுகாப்பது தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜோஷ் எர்னஸ்ட் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:-
அணு ஆயுதங்களை பாதுகாப்பது தொடர்பான விவகாரங்களுக்கு எதிர்வரும் அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய நிலையில் தலையாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக இதை கருத வேண்டியுள்ளது.
சமீபத்தில் தீவிரவாத தாக்குதலை சந்தித்த பெல்ஜியம் நாட்டு அரசு தன்வசமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பு தொடர்பாக தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத நிலையங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களை களச்சோதனை செய்ய ராணுவ வீரர்களை கொண்ட அதிரடிப்படையை உருவாக்கியுள்ளது, என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். இதுபோன்ற இடங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதே, எதிர்வரும் அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் முன்னுரிமைக்குரிய விவகாரங்களாக இருக்கும்.
எங்கள் நாட்டை (அமெரிக்கா) பாதுகாக்க பெல்ஜியம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு துணையாக அவர்கள் நாட்டில் உள்ள அணு நிலையங்களுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான உரிய உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
அமெரிக்காவின் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அணு ஆபத்தை தடுப்பது தொடர்பாக அதிபர் பராக் ஒபாமா தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிட்டுள்ளார். அவர் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னரே அணு ஆயுத பாதுகாப்பு தொடர்பாக முன்னுரிமை அளித்து வந்துள்ளார்.
இதன்விளைவாகவே, அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு என்ற தனிஅமைப்பை நாங்கள் உருவாக்கினோம். இந்த அமைப்பின் மூலம் இவ்விவகாரம் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி, நமது நாட்டில் வாழும் அமெரிக்கர்களும், உலகில் உள்ள பிறநாடுகளும் அணு ஆயுத பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating