பெண்ணாடத்தில் பட்டப்பகலில் புகுந்த திருடனை வீட்டுக்குள் பூட்டி வைத்த மூதாட்டி…!!
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). தனியாக வசித்து வருகிறார்.
இந்த மூதாட்டி, பகலில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்றிருந்தார். அந்த வீட்டின் முன்பக்க வாசல் கதவு திறந்திருந்தது. அதனை நோட்டமிட்ட மர்ம மனிதன் நைசாக உள்ளே புகுந்தான். அங்கு டி.வி. ஸ்டாண்டு மீது இருந்த 200 ரூபாயை திருடினான்.
தோட்டத்துக்குள் இருந்து வீட்டுக்குள் வந்த பூங்காவனம், மர்ம மனிதனை கண்டு திடுக்கிட்டார். மறு வினாடியே சுதாரித்துக் கொண்டு, ‘நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டபடியே வீட்டின் முன்புறம் வந்தார். பிறகு திடீரென முன்வாசல் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு திருடன்… திருடன்… என அலறினார்.
அந்த சத்தம் கேட்டு அக்கம் பகக்த்தினர் ஓடி வந்தனர். கதவை திறந்து திரு… திரு… என விழித்த அந்த திருடனை மடக்கி பிடித்து பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பணம் திருடி அகப்பட்டவன் பக்கத்து கிராமமான திருவட்டத்துறையை சேர்ந்த பழனிவேல் (40) என்பது தெரிய வந்தது. பழனிவேலை போலீசார் கைது செய்தனர். அவன் திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Average Rating