புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…!!
புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர்களது மகன் திலீபன்(7). அங்குள்ள பள்ளியில் 2–ம்வகுப்பு படித்து வந்தான். ராஜன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து சித்ராவும், திலீபனும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் சித்ராவின் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கதவை தட்டி, சித்ராவை அழைத்தனர்.
ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதைத்தொடர்ந்து ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே தூக்குப்போட்ட நிலையில் சித்ரா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். திலீபனும் மயங்கிய நிலையில் கிடந்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே 2 பேரும் இறந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திலீபனை கழுத்தை நெரித்துக்கொன்று சித்ரா தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
குடும்ப வறுமையின் காரணமாக சித்ரா மகனை கொன்று தற்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரது உடலையும், திலீபன் உடலையும் அப்பகுதி பொதுமக்களே அடக்கம் செய்தனர். மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் ஆலங்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating