ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்: விண்ணில் வெடித்துச் சிதறியதா…!!
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கபட்ட ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை மற்றும் விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக உயரிய தொழில்நுட்பத்துடன் ஏவபட்ட இந்த செயற்கைக் கோளிடமிருந்து வந்துகொண்டிருந்த தகவல்கள் திடீர் என நின்று போனது. செயற்கைக்கோள் என்ன ஆனது என தெரியவில்லை.
கடந்த சனிக்கிழமை அமெரிக்க கூட்டு விண்வெளி செயல்பாட்டு மையம், விண்வெளி குப்பைகளை கண்காணித்தபோது ஜப்பானின் செயற்கைகோளைச் சுற்றி 5 உடைந்த பாகங்களை கண்டறிந்ததாக கூறியது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் தரைக்கட்டுப்பாட்டு மையம் செயற்கை கோளை தொடர்பு கொண்டபோது சிறிது நேரம் தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
செயற்கைக் கோளில் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டதுபோல் தோன்றியது. அது ஒளிப்பிளம்பாக தெரிந்ததை பூமியில் இருந்து பார்த்துள்ளனர். எனவே, செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து உடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெரும்பாலும் செயற்கைக்கோள் அப்படியே இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளபோதிலும், அது உடைந்திருக்கலாம் என அமெரிக்க கூட்டு விண்வெளி செயல்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து செயற்கைக் கோளை தொடர்பு கொள்ள ஜப்பான் விண்வெளி மைய விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க ஏஜென்சி அளித்திருக்கும் தகவல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Average Rating