கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்! கடவுள் தாழ்மையையே விரும்புகிறார்!!
தாங்கள் மட்டுமே நேர்மையானவர் என்று கூறி, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கிய சிலரை குறித்து இயேசு தனது சீடர்களிடம் கூறியதாவது: இருவர் இறைவனிடம் வேண்ட கோயிலுக்கு சென்றனர். ஒருவர் பரிசேயர். மற்றவர் வரி வசூலிப்பவர். பரிசேயர் இறைவனிடம்,”” கடவுளே நான் கொள்ளையர், நேர்மையற்றோர், தீயோர் போன்றோ, மற்ற மக்களைப் போலவோ அல்லது என் பின்னால் நிற்கும் வரி வசூலிப்பவனை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நான் நோன்பிருக்கிறேன். என் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக செலுத்துகின்றேன்,” என்றார். வரிவசூலிப்பவர் கோயிலுக்குள் நுழையாமல் வாசலில் நின்று கொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூட துணிவில்லாமல் தன் மார்பில் அடித்துக் கொண்டு, “” கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்,” என்றார். இவர்கள் இருவரில் வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் “தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்’. தனது குலம், தனது தொழில், தனது உறவு என்று பார்த்து பழகிப் போனவர்கள் பிறரது நன்மையை, உயர்வை, உணர்வை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போகின்றனர். பரிசேயனின் மனநிலையும், ஜெபமும் இதையே உணர்த்துகின்றன. சிறந்தது எது என்ற கேள்விக்கு சிறப்பானது அன்பே என்று இயேசு பதிலளித்தார்.
பரிசேயரது ஜெபத்தில் ஆணவம், தற்பெருமை, தற்புகழ்ச்சிதான் கருவாக அமைந்திருந்தது. ஜெபத்தின் இலக்கு இறைவன். ஆனால், தன்னலம் நிறைந்தவர்களின் ஜெபத்தில் இறைவனுக்கு முக்கியத் துவம் இல்லை. ஆனால், அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது குறைகளை உணராமல் திருந்த முடியாது. விரும்பாமல், முயற்சிக்காமல் மனமாற்றம் அடைய முடியாது.
“கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கும்’ என்று இரங்கி வேண்டியவர்கள்தான் புனிதர்களாக மாறினர். ஜெபம், நோன்பு, பிறர் மீதான அன்பு, பணி இவை மூன்றும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலில் நாம்வளர உதவி செய்யும் கருவிகள். இரக்கம் வேண்டியவன் இரக்கம் பெறுவான். பெருமை பாராட்டியவன் சிறுமையடைவான். “தான்’ என்ற ஆணவம் படைத்தவர்களுக்கு கடவுளின் உதவி தேவையில்லை.