திருவாரூர் அருகே வாகன சோதனையில் ரூ. 50 லட்சம் பறிமுதல்…!!
திருவாரூர் அருகே வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகிற மே மாதம் 16-&ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அரசியல் கட்சிகளின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 12 பறக்கும்படை, 12 நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி பரஞ்சோதி தலைமையில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானராஜகோபாலன் மற்றும் போலீசார் சன்னாநல்லூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.
அந்த காரில், ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப் பணம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு வங்கி கிளை அலுவலகத்தில் இருந்து திருவாரூர் கிளைக்கு எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
ஆனால் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகாபதி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பணத்தை கருவூலகத்தில் செலுத்தினர்.
Average Rating