கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விபத்தில் 24 பேர் பலி: கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது…!!
24 உயிர்களை பலிகொண்ட கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகளை கொல்கத்தா நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் இங்கு ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 60 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி விழுந்த இடிபாடுகளுக்கு இடையில் பல தொழிலாளர்கள் சிக்கினர். லாரி, ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் சிக்கிக் கொண்டன.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்திருந்தார். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனமான ஐ.வி.ஆர்.சி.எல். கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
Average Rating