வேண்டுமென்றே தாக்கிய இஸ்ரேல் -ஐ.நா
லெபனானில் ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் முகாமிட்டிருந்த இடத்தில் குண்டு வீச்சு நடத்த வேண்டாம் என இஸ்ரேலை ஐ.நா. அதிகாரிகள் 10 முறை தொலைபேசியில் எச்சரித்தும் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் தரை வழியாகவும், வான் வழியாகவும் தொடர்ந்து நடத்திய தாக்குதலின் விளைவாகவே 4 ஐ.நா. பார்வையாளர்கள் உயிரிழக்க நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அயர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், ஐ.நா. முகாம் உள்ள இடத்திற்கு அருகே குண்டு வீச்சு நடப்பதாகவும், இதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அயர்லாந்து மூத்த ராணுவ அதிகாரி இஸ்ரேலை 10 முறை எச்சரித்துள்ளார். ஆனால் அதை இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் தாக்குதல் நடத்தி ஐ.நா. பார்வையாளர்களை கொன்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் கனடா, பின்லாந்து, ஆஸ்திரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நான்கு ஐ.நா. பார்வையாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெ¶வித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். வேண்டும் என்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் போல இது தெரிகிறது என்றார் அன்னான்.
ஆனால் வேண்டும் என்றே இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக இஸ்ரேல் சார்பில் வருத்தம் தெரிவிக்கிறேன். இதை திட்டமிட்டு இஸ்ரேல் செய்யவில்லை என்று கோபி அன்னானிடம் தொலைபேசி மூலம் தெரவித்துள்ளார் ஒல்மர்ட்.
இஸ்ரேலுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் அமெரிக்காவும், அன்னான் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கடும் சண்டை நடக்கும்போது இவ்வாறு நேர்வது சாதாரண விஷயம். இதை உள்நோக்கத்துடன் பார்க்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.