நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கு: சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறை…!!
நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி நல்லையா (வயது 71). அங்கு கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல் ரங்கராஜூ ரங்கசாமி பாலசாமி என்பவரும் பால்ய நண்பர்கள்.
2002-ம் ஆண்டு கோவிந்தசாமி நல்லையா மீதான ஊழல் வழக்கில் அவரது தரப்பில் பாலசாமி வக்கீலாக ஆஜரானார். அந்தவகையில் பாலசாமிக்கு வக்கீல் கட்டணமாக கொடுக்கவேண்டிய 38 ஆயிரம் சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.18 லட்சத்து 62 ஆயிரம்) கோவிந்தசாமி கொடுக்காமல் இருந்து வந்து உள்ளார். இதையடுத்து இந்த கடன் தொகையை 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் திருப்பிகொடுக்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் கோவிந்தசாமியால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கோவிந்தசாமி, பாலசாமியின் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு பாலசாமி இல்லை. அவரது மனைவியான சீனாவை சேர்ந்த லோ பூங் மெங் இருந்தார். கோவிந்தசாமி கடன் தொகை தொடர்பாக பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவிந்தசாமி சைக்கிள் செயினால் அவரை பயங்கரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து மயக்கம் அடைந்தார்.
பின்னர் கோவிந்தசாமி அந்த அலுவலகத்துக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். லோ பூங் மெங் தீயில் கருகி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது கோவிந்தசாமிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவரது வயதை கருத்தில் கொண்டு அவருக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்படவில்லை.
Average Rating