பாளையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 75 பவுன் நகைகள்-பணம் கொள்ளை…!!
பாளையில் சர்ச்சுக்கு சென்றிருந்த கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 75 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மயிலோட்டை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது60).இவர் தனது மனைவி மார்கிரெட் மேரி மற்றும் மகள், மருமகனுடன் பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் விவேகானந்தர் காலனியில் வசித்து வருகிறார்.
இன்று சேவியர் காலனியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு தனிஸ்லாஸ் மற்றும் அவரது மனைவி மார்கிரெட் மேரி ஆகியோர் சென்றனர். மகளும், மருமகனும் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
இதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் அறையில் உள்ள சுவரில் துளை போட்டு புகுந்தனர். அறைக்குள் பீரோவில் இருந்த 75 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பினர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
ஆலயத்தில் இருந்து திரும்பி வந்த தனிஸ்லாஸ் பீரோ உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர்கள் ராஜன், சந்தோஷ் கடிமணி ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்து.
மேலும் மோப்பநாய் அழைத்து வரப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டு பகுதியை நோக்கி ஓடியது. கொள்ளை நடந்தது குறித்து தனிஸ்லாஸ் கூறும்போது, `எனது மகளும், மருமகனும் நாகர்கோவில் சென்றுள்ளனர். நான் என் மனைவியுடன் ஆலயத்திற்கு சென்றிருந்தேன். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு சுவரில் துளை போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்றார்.
கொள்ளை நடந்த நேரத்தில் அந்த வீட்டின் அருகே ஒரு தம்பதியினர் சிறுவன் ஒருவனுடன் நின்றுள்ளனர். இதை அந்த பகுதியில் உள்ள சிலர் பார்த்துள்ளனர். அந்த தம்பதி சிறிய மூட்டை ஒன்றுடன் கொள்ளை நடந்த வீட்டின் பின்புறம் நடந்து சென்றதாக அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
கொள்ளை நடந்த வீட்டின் சுவரில் போடப்பட்டுள்ள துளை சிறிய அளவில் உள்ளதால் சிறுவனை பயன்படுத்தி அந்த தம்பதியினர் கொள்ளையில் ஈடுபட்டனரா? அல்லது வேறு யாரும் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating