கீழக்கரையில் பறந்து திரிந்த வெள்ளை நிற காகம்..!!
காகம் என்றாலே அதன் கருமை நிறம் தான் நினைவுக்கு வரும். சிறுவயது குழந்தைகளுக்கு பெற்றோர் காகத்தை சுட்டிக்காட்டியும், அதன் கருமையை சுட்டிக்காட்டியும்தான் உணவு ஊட்டுவது வழக்கம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே காகம் என்றாலே கருமை நிறம் என்பது தான் அனைவரது மனதிலும் பதிந்துள்ளது.
கருமை நிறமுடைய காகம் அதன் இயற்கையான நிறத்தோடு அல்லாமல் வெண்மையாக காட்சியளித்தால் அது அதிசயமான ஒன்றாகவே உள்ளது. இதனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்காவது வெள்ளை நிற காகம் பறந்தாலோ, பறப்பதாக கூறினாலோ அதை அதிசயமாக ஆச்சரியமாக பார்ப்பதுண்டு. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்த வெள்ளை நிற காகம் பறந்து திரிந்த அதிசயம் நடந்து வருகிறது.
கீழக்கரை சொக்கநாதர் கோவில் அருகே அகமது தெருவில் கடந்த சில நாட்களாக வெள்ளை நிற காகம் ஒன்று பறந்து திரிந்து வருகிறது. இதனை அந்த பகுதியினர் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் பார்த்து ரசிக்கின்றனர். வேறு எந்த பகுதிகளுக்கும் செல்லாமல் குறிப்பிட்ட அந்த பகுதியில் மட்டுமே அந்த காகம் தொடர்ந்து பறந்து சென்று வருகிறது.
மற்ற காக்கை கூட்டங்கள் இதன் நிறமாற்றம் காரணமாக தனது கூட்டத்தோடு சேர்க்காமல் வெள்ளை காகத்தை அருகில் நெருங்க விடாமல் விரட்டி விடுகின்றன. இதன்காரணமாக இந்த வெள்ளை காகத்திற்கு இரை கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.
இந்த அதிசய காகத்துக்கு கீழக்கரை பகுதி பொதுமக்கள் உணவளித்து அடைக்கலம் கொடுத்துள்ளனர். பொதுவாக பறவைகளில் அல்பினிசம் என்ற நோய் காரணமாக நிறமி குறைபாடு அல்லது நிறமி மாற்றம் ஏற்பட்டு இதுபோன்று நிறம் மாறுவது வழக்கம் என்று கூறுகின்றனர். கீழக்கரையில் பறந்து திரியும் இந்த வெள்ளை காகத்திற்கும் அல்பினிசம் நோய் காரணமாக நிறமி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Average Rating