கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி கடல் பகுதியில் மணல் தீடை இரண்டாக பிரிந்தது..!!
ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 5-வது மணல் தீடையுடன் இந்திய எல்லை பகுதி முடிவடைந்து விடுகிறது. தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்த மணல் தீடைகள் பகல் முழுவதும் கடல்நீர் வற்றிய நிலையிலும் இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்தும் காணப்படுவது வழக்கம். தமிழக கடல் பகுதிகளிலேயே கடல் சீற்றம், நீரோட்டம், சுழற்சி ஆகியவை இங்கு தான் அதிகமாக காணப்படும்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தான் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினமும் ஜீப் மற்றும் வேன்கள் மூலம் இங்கு வந்து கடலில் நீராடுவதுடன் இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தையும், நடுக்கடலில் உள்ள மணல் தீடைகளையும் பார்த்து விட்டுச் செல்வார்கள்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் நீரோட்டம் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் மணல் தீடை இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அத்துடன் அரிச்சல்முனை கடற்கரையின் மிக அருகில் நின்று பார்க்கும் அளவிற்கு மணல் பரப்பு அதிகமாகியுள்ளது. இதனால் அந்த பகுதியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரையில் நின்று கடலுக்கு நடுவே அருகருகே இரண்டாக பிரிந்து கிடக்கும் மணல் தீடையை கூட்டம் கூட்டமாக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
தனுஷ்கோடி கடற்கரையில் மணல் தீடை இரண்டாக பிரிந்து கிடப்பது பற்றி கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அங்கு சுற்றுலா வாகனம் ஓட்டி வரும் டிரைவர் முருகேசன் கூறுகையில், ‘தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து முதல் மணல் தீடையை தூரத்தில்தான் முன்பு பார்க்க முடியும். இதனால் அந்த மணல் தீடை தெளிவாக தெரியாது. ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் நீரோட்ட மாற்றத்தாலும், காற்றின் வேகத்தாலும் நடுக்கடலில் அமைந்துள்ள முதலாவது மணல் தீடை இரண்டாக பிரிந்தோடு மட்டுமல்லாமல் மணல் பரப்பு அதிகமாகி அரிச்சல்முனை கடற்கரைக்கு மிக அருகில் வந்துள்ளது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் வியந்தபடி இதை பார்த்து ரசித்து செல்கின்றனர்’ என்றார்.
Average Rating