திண்டுக்கல் அருகே போலீஸ்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை..!!
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு மின்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மனைவி உமா. அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் காளிதாஸ், சரவணன். இருவரும் கரூர் மாவட்ட காவல்துறையில் போலீசாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் அவர்கள் கரூரில் தங்கியுள்ளனர். பெற்றோர் எரியோட்டில் வசித்து வருகின்றனர்.
உமா நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த தங்கபாண்டியனும் சிறிது நேரம்கழித்து வெளியே சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த ரூ.91 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். நகையை அடகு வைத்து பெற்ற அந்த பணத்தை எடுத்துச்செல்வதற்காக போலீஸ்காரர் சரவணன் கரூரிலிருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது தாய் உமா வந்ததும் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எரியோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating