2-வது நாளாக தாக்குதல்: விடுதலைப்புலிகளின் விமானதளம் மீது இலங்கை விமானங்கள் குண்டு வீச்சு
விடுதலைப்புலிகளின் விமானதளம் மீது இலங்கை விமானங்கள் நேற்று 2-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாட்டு தூதுக்குழு முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. சமீபகாலமாக போர்நிறுத்தத்தை விடுதலைப்புலிகளும், ராணுவமும் மீறி வருகின்றன.
தண்ணீருக்கு தடை
இந்தநிலையில் திரிகோணமலை மாவட்டத்தில், ஏரியின் மதகுகளை விடுதலைப்புலிகள் மூடி விட்டதாக கூறப்படுகிறது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீருக்கு விடுதலைப்புலிகள் தடை ஏற்படுத்தியதால் இலங்கை அரசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாவிலாறு, கிருகலாறு ஆகிய இடங்களில் இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
2-வது நாளாக
திரிகோணமலை துறைமுகத்துக்கு வடக்கே விடுதலைப்புலிகள் அமைத்துள்ள விமானதளம் மீது நேற்று 2-வது நாளாக இலங்கை போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஏற்பட்ட சேத மதிப்பு விவரம் தெரியவில்லை.
தண்ணீர் வினியோகத்துக்கு ஏற்பட்ட தடையை நீக்க, தரை வழி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள்
“தங்கள் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வற்புறுத்தி அங்குள்ள தமிழ்மக்கள் தான் மதகுகளை மூடினர்; விடுதலைப்புலிகள் மூடவில்லை; இந்த பிரச்சினையை சமரச கண்காணிப்பாளர்கள் மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்” என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.
இலங்கையில், ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு தொடங்கிய இலங்கை போரில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 800 பேர் கொல்லப்பட்டனர்.