3 மாணவிகள் மர்மச்சாவு: கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வழக்கு…!!
எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வாசுகி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜனவரி 23ம் தேதி மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனி ஷா ஆகியோரின் மரணத்தை தொடர்ந்து அவர்கள் படித்த இயற்கை மருத்து வக்கல்லூரிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதே வளாகத்தில் இயங்கிய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் சீல் வைத்துள்ளார். இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு எங்களிடம் அவர் விளக்கம் கேட்கவில்லை.
ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் ஆயுஷ் துறை அனுமதி வழங்கியுள்ளது. அப்படி இருக்கும்போது, மாவட்ட கலெக்டர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளார்.
மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் செயலாளர் கடந்த பிப்ரவரி 16ந் தேதி கவுன்சில் விதிமுறைப்படி கல்லூரியை ஆய்வு செய்ய கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் கேட்கும் விளக்கங்களை தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 15–ந் தேதிக்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதால் எந்த பதிலும் அனுப்பமுடியவில்லை.
மாணவிகள் மரணமடைந்த வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்த நான் கடந்த மாதம் 24–ந் தேதிதான் ஜாமினில் வெளியில் வந்தேன்.
எனவே, சீலை அகற்றவும், ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஆயுஷ் செயலர், மத்திய ஹோமியோபதி கல்வி கவுன்சில் செயலர், விழுப்புரம் ஆமாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
Average Rating