அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்: ஜி-7 நாடுகள் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பிரகடனம்..!!
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் ’அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்’ என்ற அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள ஜப்பான், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகளாக இருந்து வருகின்றன.
ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு வரும் மே 26, 27 தேதிகளில் ஜப்பானின் கான்சி கோஜிமா தீவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், அணுகுண்டு வீச்சால் நாசமடைந்த ஹிரோஷிமா நகரில் நேற்றுகூடி ஆலோசனை நடத்தினர்
தீவிரவாதம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி உள்ளிட்ட ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று ஒரு கூட்டுப் பிரகடன அறிக்கையை வெளியிட்டனர். அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
’வடகொரியாவின் தொடர் அத்துமீறல்கள், சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகளின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான உலகம் உருவாகவும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை ஏற்படுத்த நாங்கள் மீண்டும் உறுதியேற்கிறோம்’ என அந்த கூட்டுப் பிரகடன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு இடையே இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்தில் உள்ள அமைதி பூங்காவிற்கு சென்ற ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் அங்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Average Rating