போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!
அசாமில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
தின்சுகியா மாவட்டம் பங்கிரீ பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கடந்த மூன்று தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். அவர்களில் மகன் மட்டும் தப்பி வந்த நிலையில், மற்ற இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக பாங்கிரீ போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாங்கிரீ காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால் அந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டோம் என்று கோஷமிட்டனர். பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் காவல் நிலையம் மீது கற்களையும் கண்ணாடி துண்டுகளையும் வீசி தாக்கினர். இதனால் அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது.
கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர். அப்போது தோட்டாக்கள் பட்டதால் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து போராட்டக்காரர்கள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி பலர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மற்றொருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர்.
Average Rating