வட மாநிலங்களில் கடுமையான பூமி அதிர்ச்சி…!!
மியான்மர் நாட்டின் சாஜிங் மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு 7.25 மணிக்கு சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 134 கி.மீ. ஆழத்தில் பூமி அதிர்ச்சி தாக்கியது.
இதனால், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், அசாம், அருணாசலபிரதேசம் மற்றும் இந்திய–மியான்மர் எல்லைப் பகுதிகளிலும் பூமி அதிர்ந்தது. இது, ஒரு நிமிடம் வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு தெருவுக்கு ஓடினர். சில நிமிட இடைவெளியில் மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
கொல்கத்தாவில், உயரமான கட்டிடங்கள் குலுங்கின. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிலர், பீதியில் மைதானத்தை விட்டு வெளியேறினர். மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அசாம் தலைநகர் கவுகாத்தியிலும், அருணாசலபிரதேசத்திலும் மின் தொடர்பு அறுந்தது.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி, ஒடிசா, சத்தீஷ்கார், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. சீனாவின் சில பகுதிகளிலும், வங்காளதேசத்திலும் உணரப்பட்டது. உயிரிழப்பு ஏதும் இல்லை.
Average Rating