உதவி கேட்டு அலறிய பெண் தீயில் எரிந்த சோகம்..!!
ரஷ்யாவின் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உதவிக்காக அலறிய காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவின் வர்ஷாவ்ஸ்கோ நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீ விபத்து ஏற்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு.
குடியிருப்பின் நான்காவது மாடியில் திடீரென்று ஏற்பட்டதீ விபத்தில் பெண் ஒருவர் சிக்கியதாக கூறப்படுகிறது. கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் இடையே அந்த பெண்மணி சாலையில் செல்லுவோர்களிடம் உதவி கேட்டு அலறியுள்ளார்.
இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர முனைப்பு காட்டினர், மேலும் உதவி கேட்டு குரல் எழுப்பிய பெண்ணை மீட்கவும் போராடினர்.
நெருப்பு பற்றிய மாடியின் ஜன்னலில் இருந்து குதித்து தப்பிக்க அப்பகுதியில் குவிந்த மக்கள் எடுத்துக் கூறியும் உயரம் காரணமாக அந்த பெண்மணி குதிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், 4வது மாடி குடியிருப்பு முழுவதும் நெருப்பு படர்ந்து பற்றியதால் உதவி கேட்ட பெண்மணியும் உயிருடன் எரிந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த விபத்தில் சிக்கிய மேலும் 3 நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இச்சம்பவம்குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Average Rating