திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்..!!
மீரட் மருத்துவ கல்லூரி அருகேயுள்ள பரிக்ஷித் காவ் பகுதியை சேர்ந்தவர் ரவிந்திரா ஜாதவ்(21). இதேபகுதியை சேர்ந்த திவ்யா(18) என்ற இளம்பெண்ணை காதலித்துவந்த இவர் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் திடீரென தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த ரவிந்திரா, நேற்று திவ்யாவின் பெற்றோர் வெளியே போயிருந்தபோது அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த திவ்யாவை சந்தித்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு திவ்யா மறுப்பு தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த ரவிந்திரா, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, திவ்யாவை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிந்திரா, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, சுருண்டு விழுந்தார்.
அருகாமையில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட ரவிந்திராவுக்கு ஏற்பட்டுள்ள குண்டு காயத்தின் தீவிரத்தன்மை கருதி அவரை டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், திவ்யாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்
Average Rating