வயிற்று வலிக்கு தேவை இல்லாமல் கருப்பையை அகற்றிய டாக்டர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!!
வயிற்று வலியுடன் வந்த பெண்ணுக்கு தேவை இல்லாமல் ஆபரேஷன் செய்து, கருப்பையை அகற்றி, அவரது மரணத்துக்கு காரணமான இரு டாக்டர்களுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வயிற்று வலிக்கு தேவை இல்லாமல் கருப்பையை அகற்றிய டாக்டர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
புதுடெல்லி:
இமாச்சலப்பிரதேசம் மாநிலம், கங்ரா பகுதியை சேர்ந்தவர் உஷா குமாரி. கடந்த 2003-ம் ஆண்டு கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இவர், இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் கருப்பையில் ஏற்பட்டிருந்த சிறிய பாதிப்புதான் வயிற்று வலிக்கு காரணம் என கருதினர்.
இதையடுத்து, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும், மகப்பேறியல் நிபுணருமாக சேர்ந்து உஷா குமாரியின் கருப்பையை அகற்றிவிட முடிவு செய்தனர். 7-7-2003 அன்று ஆபரேஷன் மூலம் கருப்பை அகற்றப்பட்ட நிலையில், அதிகமான ரத்தப்போக்கு காரணமாக 16-7-2003 அன்று தனது 37-வது வயதில் உஷா குமாரி இறந்துப் போனார்.
அவரது மரணத்துக்கு டாக்டர்களின் அவசர முடிவும், அஜாக்கிரத்தையான சிகிச்சையுமே காரணம் என குற்றம்சாட்டிய உஷாவின் உறவினர்கள், இமாச்சலப்பிரதேசம் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணைய தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எம். மாலிக் தலைமையிலான நடுவர் குழு, முறையான அடிப்படை பரிசோதனைகளை செய்யாமல், எடுத்த எடுப்பிலேயே கருப்பையை அகற்றிவிட முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உரிய மயக்க மருந்துகூட செலுத்தாமல் ஆபரேஷன் செய்ததால்தான் உஷா ராணிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி மரணம் நேரிட்டது என்ற புகார்தாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், இந்த ஆபரேஷனை தேவையில்லாமல் நடத்தி, ஒரு மரணத்துக்கு காரணமாக அமைந்துவிட்ட இரு டாக்டர்களுக்கும் தலா ஐந்து லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த அபராதத் தொகையான பத்து லட்சம் ரூபாயை உஷா குமாரியின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக அளிக்கும்படி நீதிபதி ஜே.எம்.மாலிக் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating