இறால் பண்ணையை தடைசெய்யக் கோரி போராட்டம்…!!
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியை மறித்து வாவிக்கரையோர மக்கள், நீர் வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழில் வலய திட்டத்தினை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது “நல்லாட்சியே கவனத்தில் கொள், இயற்கையை பாதுகாத்தால் தான் இராதோறும் இரணம் கிடைக்கும், வாகரை பிரதேச மக்களின் வயிற்றிலா அடிக்கின்றீர்?, போராடுவோம் போராடுவோம் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம், எம் மக்களின் வாழ்வின் தொழில் முதலைகளின் வேட்டையா?, இயற்கையின் அழகை அழித்தா அபிவிருத்தி? அது வேண்டாம்” என பல சுலோகங்களை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதால் வாகரை பிரதேசத்தில் சதுப்பு நிலத் தாவரங்கள் அழிந்து செல்லும் நிலைமையும், களப்பு நீர் மாசுபடுதலும், களப்பு மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுதலும், மீன் நண்டு இறால் இனப்பெருக்கம் தடைப்படுத்தலும், அயல் பிரதேச நிலங்கள் உவர் தன்மை அடைதல், விலங்கு வளர்ப்பு பாதிக்கப்படுதல், வாவி நீர் மட்டம் குறைதல், பல்லினத் தன்மையின் நிலவுகைக்கு பாதகமாக அமைதல் போன்ற தீமையான விடயங்கள் ஏற்படும். இதனாலேயே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று ஏற்கனவே காயான்கேணி, வட்டவான் பகுதியில் இவ்வாறான வலயம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் கண்டல் மரங்கள் அழிந்து போகும் நிலையும், களப்பு நீர் மாசுபடுதலும், மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டு காணப்படுவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மக்களுடன் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன்போது சுமார் மூன்று மணிக்கு மேல் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. குறித்த வீதியின் ஊடாக அம்புலனஸ் மற்றும் சிறைச்சாலை வாகனங்களை மாத்திரம் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.
இதனால் இந்தத் திட்டம் மக்களுக்கு பொருந்தாமையினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மறுபரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்கள் சந்திப்புடன் அடுத்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கூறியதற்கிணங்க மக்கள் கலைந்து சென்றனர்.
Average Rating