ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிறையில் தங்கவைத்த அதிகாரிகள்…!!
ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு சிறையில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.
ஜப்பானில் கடந்த 12-ந்தேதி தென்மேற்கு பகுதியில் உள்ள கியூசு தீவில் குமாமோட்டோ பகுதியில் தொடர்ந்து 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சிறிய அளவில் 600 நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்ததிலும், நிலச்சரிவிலும் சிக்கி 46 பேர் பலியாகினர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 208 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூகம்பத்தில் வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் தங்க இடமின்றி பலர் தவிக்கின்றனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இரவு நேரங்களில் அங்கேயே தூங்குகின்றனர். பலர் தங்கள் கார்களையே வீடாக மாற்றி அதில் தங்கியுள்ளனர்.
மேலும் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேடுகளால் அவதியுறுகின்றனர். இது போன்று சுமார் 1 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே அவர்களில் பலர் குமாமோட்டா மத்திய சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் 250 பேர் மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மேலும் 110 பேர் சிறையில் உள்ள பயிற்சி ஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 500 சிறைக் கைதிகளும் அங்கு உள்ளனர். 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியில் 18,800 பேர் பலியாகினர். அப்போதும் வீடுகளை இழந்தவர்கள் இது போன்று சிறையில் தங்க வைக்கப்பட்டனர்.
Average Rating