கேரளாவில் கடும் வெயில்: பெண் உள்பட 3 பேர் பலி..!!
கேரள மாநிலம் மலைகள், காடுகள், நீர்நிலைகள் நிறைந்த இயற்கை எழில் பிரதேசமாக இருப்பதால் அங்கு பெரும்பாலான இடங்களில் குளுகுளு சூழ்நிலையே நிலவும்.
தற்போது கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் வெயிலின் பாதிப்பு மிக கடுமையாக இருக்கிறது. பாலக்காடு, கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு, கொச்சி போன்ற இடங்களில் தீப்போல வெயில் கொளுத்துகிறது.
தலைநகரான திருவனந்தபுரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் வெயில் கொடுமைக்கு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். திருச்சூரில் அனந்தபுரம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த அம்மனி (வயது 65). என்பவர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது நடு ரோட்டில் சுருண்டு விழுந்து பலியானார். இதேபோல வயநாட்டில் நல்லதம்பி (59) என்ற எஸ்டேட் தொழிலாளியும், அடூரில் விக்ரமன் (61) என்ற கூலித்தொழிலாளியும் வெயிலின் கொடுமையால் பலியாகி உள்ளனர்.
கேரளாவில் உள்ள பெரிய நீர் தேக்கங்களில் ஒன்றான இடுக்கி அணையிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அங்கு தற்போது 29 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் 35 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் மக்கள் சாலைகளில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Average Rating